ஒரு வருடத்தில் இவ்வளவு தான் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறதா..? ஷாக்கிங் ரிப்போர்ட்..!

Aug 20, 2019

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் மீண்டும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருப்பது போலத் தான் தெரிகிறது. இந்த வேலை இழப்புப் பிரச்னை ஆட்டோமொபைல் துறையில் தொடங்கியதை கண் கூடாகப் பார்த்தோம். மற்ற துறைகளில்..?

வங்கி, இன்சூரன்ஸ், ஆட்டோமொபைல், லாஜிஸ்டிக்ஸ், உள் கட்டமைப்புத் துறை என பல துறை சார் நிறுவனங்கள் வழக்கத்தை விட குறைவாகவே ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என கேர் ரேட்டிங் நிறுவனம் சொல்லி இருக்கிறது.

இந்த விவரங்களை சுமாராக 1,000 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளில் இருந்து திரட்டி இருக்கிறார்களாம். இந்தியாவின் சேவைத் துறை தான் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக கூடுதலாக வேலைக்கு ஆட்களை எடுத்து இருக்கிறார்களாம்.


இமேஜ் பிரச்னை

இப்படி வழக்கத்தை விட குறைவாக ஆட்களை வேலைக்கு எடுப்பதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் 2019 காலாண்டில் வளர்ச்சி சரிந்திருப்பதற்கும், நுகர்வோர் தேவை குறைந்திருப்பதற்கும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறதாம். பிரதமர் நரேந்திர மோடிக்கோ, இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்னையால், சர்வதேச அளவில் முதலீடு செய்யத் தக்க நாடாக இருக்கும் இந்தியாவின் இமேஜ் பெரிய அளவில் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.


2017 - 18-ல்

இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு கடந்த மார்ச் 2017-ல் 54.4 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 2018 முடிவில் இந்த எண்ணிக்கை வெறும் 57.8 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறது. ஆக சுமாராக 6.2 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் கடந்த 2017 முதல் 2018 வரையான ஒரு வருடத்தில் அதிகரித்து இருக்கின்றன என திடுக்கிடும் தகவலைச் சொல்லி இருக்கிறது கேர் ரேட்டிங் அமைப்பு.


தற்போதைய நிலை

அதை விட கொடுமையான விஷயம் என்ன தெரியுமா..? மார்ச் 2019-ல் நிலவரப்படி இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு வெறும் 60.3 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறதாம். அதாவது மார்ச் 2018 முதல் மார்ச் 2019 வரையான ஒரு வருடத்தில் சுமாராக 4.3 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. ஆக கண் முன்னே வேலை வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டு இருப்பதை பகிரங்கமாகப் பார்க்க முடிகிறது.


உற்பத்திப் பிரச்னை

இரும்பு, ஸ்டீல் மற்றும் சுரங்கம் சார் வேலைகளில் உற்பத்தி குறைந்து இருப்பதாலும், வங்கி சார் கடன் பிரச்னைகளாலும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதாம். உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற விருந்தோம்பல் துறைகளில் பணியாளர்களை வேலைக்கு எடுத்து சம்பளம் என்கிற பெயரில் செலவை அதிகரித்துக் கொள்ள விரும்பாமல், அவுட் சோர்ஸிங் செய்வது அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறதாம்.


வங்கிகள்

இந்த வேலை இழப்பு பிரச்னைகளில் வங்கிகளும் தப்பவில்லை. வங்கிகளில் கூட தங்கள் வேலைகளைச் செய்து கொடுக்க, வேறு ஒரு நிறுவனத்திடம் அவுட் சோர்ஸ் செய்வது, இருக்கும் ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அல்லது செயல்பாடுகள் அடிப்படையில் வேலையில் இருந்து நீக்குவது என பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டேதான் இருக்கிறார்களாம். அதையும் தாண்டி பல பலவீனமான அரசு வங்கிகளில் புதிதாக ஆட்களை எடுப்பதற்கும் தடை விதித்து இருக்கிறார்களாம்.


https://tamil.goodreturns.in/news/2019/08/20/jobs-shocking-report-250000-jobs-only-created-in-last-one-year/articlecontent-pf80035-015712.html

RELATED NEWS